‘என்ன நடந்தாலும் எனது கடமையிலிருந்து தவற மாட்டேன்’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, மோடி பெயர் குறித்து ராகுல் முன்வைத்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன நடந்தாலும் எனது கடமையில் இருந்து தவற மாட்டேன்; இந்தியாவின் கொள்கையை பாதுகாப்பதே எனது இலக்கு” என ட்வீட் செய்துள்ளார்.