வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்த நபர் ஒருவர் ரூ.6.16 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பெரும்பாலான மக்களிடம் மெட்டாவின் சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் செயலி இல்லாமல் இருக்காது. தற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றன. இதன்மூலம் மக்கள் செய்திகளை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால், சிலர் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கான மோசடி வேலைகளை செய்ய இதனை பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், நாக்பூரைச் சேர்ந்த 29 வயதான நபர் தனது வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ரூ.6.16 லட்சத்தை இழந்துள்ளார். ஒரு பெண் அவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்தைப் பற்றிய தகவல்ளை லிங்க் மூலம் அனுப்புவதாகவும், அதனை சரிபார்க்கும்படியும் அந்த நபரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் அந்த இணைப்பை கிளிக் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.16 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. பின்னர், இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.