சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மல்லிகா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது மகன் பத்ரி நாராயணன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஐடி ஊழியரான பத்ரி நாராயணன் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவைப் பார்ப்பதற்காகச் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனது ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது 2 முறை ஏடிஎம் பின் நம்பர் தவறாக பதிவிட்டதால் ஏடிஎம் கார்டு தானாகவே பிளாக் ஆகிவிட்டது. இந்நிலையில், பத்ரிநாராயணனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களது பான் கார்டு காலாவதி ஆகி விட்டதால், ஏடிஎம் கார்டை பிளாக்கில் இருந்து நீக்குவது கடினம் என கூறியுள்ளார்.
ஆகையால் உடனடியாக பான் கார்டை புதுப்பிக்க வேண்டும். மேலும் தான் அனுப்பக்கூடிய லிங்கை கிளிக் செய்து ஏடிஎம் கார்டு எண்ணைப் பதிவிட்டால் உடனடியாக பிளாக் நீங்கிவிடும் என்று சூசனமாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பத்ரி நாராயணன் அந்த லிங்க்கை கிளிக் செய்து வங்கி எண்ணையும் கொடுத்துள்ளார். பின்னர் உடனே பத்ரி நாராயணன் வங்கி கணக்கிலிருந்த 10 லட்சம் ரூபாய் தவணை முறையில் அடுத்தடுத்து பறிபோகியுள்ளது. பணம் போன குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.