பெங்களூருவில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம்-ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால் வாங்கிக் கொள்ளலாம். பால் கெட்டுப்போகாத வகையில் சிறந்த தொழில்நுட்பத்துடன் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த, மிஷினில் ரூ.5 நாணயம், ரூ.10 நாணயம், ரூ.20 மற்றும் ரூ.50, ரூ.100 போன்றவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
எவ்வளவு பால் வேண்டுமோ அதனை தேர்வு செய்து அதற்கான தொகையை செலுத்தினால் போதும் பால் வாங்குவதற்கான பாத்திரத்தை காட்டியதும் அதில் பால் நிரப்பி அதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மெஷினில் பால் வாங்குவதற்கு பிரத்தியேகமாக ஒரு ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் அதனை வாங்கிக் கொள்ளலாம். தற்போது பெங்களூருவில் இரண்டு அப்பார்ட்மெண்டுகளில் மட்டுமே இந்த பால் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் பல இடங்களிலும் இது அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.