பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை. மேலும், போலிப் பத்திரப்பதிவும் ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு புதிய சட்டத்தின்படி, இதுவரை 2,500 போலிப் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார் பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவுக்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது. அதுமட்டுமின்றி, ஒளி வருடல் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதன் மூலம் மெய் தன்மை உறுதி செய்யப்படும். இப்போது, ஆவணங்கள் அனைத்திலும் 1-5-2023க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத்துறை ஐஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், “ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களை பிரித்து எடுத்து சேமித்து வைப்பதன் மூலமாக அவற்றின் மெய்த்தன்மை எந்த காலத்திலும் உறுதி செய்யப்படும். நம்பிக்கை இணையத்திட்டமானது, பதிவு துறையில் கடந்த 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நம்பிக்கை இணையம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைத்து சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கென அலுவலகத்தில் மட்டுமே செயல்படத்தக்க வகையிலான ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்ட ஆவணங்களின் நகல்களை பொதுமக்கள் கோரினால், உரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவற்றை வழங்கலாம். ஆனால், அப்படி வழங்கும்போது, நம்பிக்கை இணையத்தின் இலச்சினை சான்றிட்ட நகரின் இடதுபுறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அவ்வாறு அச்சிடப்பட்டிருந்தால் அந்த ஆவணங்கள் நம்பிக்கை இணையம் வழிசரிபார்க்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை இணையம் என்பது குடிமக்களின் ஆவணங்கள், தரவுகளை பாதுகாப்பான முறையில் சேமிக்க அரசு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு இணையவழி அமைப்பாகும். அத்துமீறி ஆவணங்களை திருடுவது, ஆவணங்களை கசிய விடுவது போன்றவற்றில் இருந்து பொதுமக்களின் ஆவணங்களை காக்கவே இந்த நம்பிக்கை இணையம் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது