சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலை.யுடன் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றுதான் பெரியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணிபுரிந்து வருபவர் கோபி. இவர் வேதியியல் துறையின் பேராசிரியராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கோபி மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை ஆய்வு மாணவியாக இருந்து வந்த ஒருவர், பேராசிரியர் விடுமுறை தினங்களில் தன்னை பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து, சேலம் மாநகர கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.