பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்1 மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே 11ஆம் வகுப்பு மாணவர் சதீஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மாணவன் சதீஷ் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததால், பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். அதற்கு நீதி விசாரணை கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் அடங்கியதும், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. முதலில் மகளின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறிய பெற்றோர் பின்னர் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், நெல்லையில் ஒரு பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.