திருச்சி அருகே டீ கடையில் நின்று கொண்டிருந்த வாலிபரை குடி போதையில் இருந்த இரண்டு நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த சமயபுரத்தைச் சார்ந்த வாலிபர் விஜய் இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த இரண்டு நபர்கள் அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர். அவர்களின் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத விஜய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதமாக இருந்த இந்த பிரச்சனை கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து குடிபோதையில் இருந்த அந்த இரண்டு நபர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் விஜயை தாக்கியுள்ளனர்.
காயமடைந்த விஜயை அங்குள்ளவர்கள் மீட்டு மணச்சநல்லூர் மருத்துவமனையில் சிஜைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி குடிபோதையில் விஜயை கத்தியால் குத்திய ரங்கநாதன் மற்றும் அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் குடிபோதை ஆசாமிகளால் இளைஞர் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.