fbpx

’பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்றவற்றை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாமே’..!! சென்னை ஐகோர்ட் யோசனை..!!

பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மூலம் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் 40,000 ரூபாய்க்கு அதிகமானால், வருமான வரிச்சட்டத்தின் 194A, 194N ஆகிய பிரிவுகளின்கீழ் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகள், நேற்றைய தினம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கங்கள் தரப்பில் வாதிடும்போது, “அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்களை உறுப்பினர்களுக்கு வழங்கும் பணியை சங்கங்கள் மேற்கொள்கின்றன. அதனால் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக எடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி செலுத்த முடியாது, வருமானவரி விலக்கு வழங்கப்பட்டது” என்று வாதிடப்பட்டது.

இதற்கு வருமானவரித்துறை தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. “மனுதாரர் சங்கங்களுக்கு எந்த விலக்கும் வழங்கப்படவில்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்குதான் வரிவிலக்கு பொருந்தும். வங்கிகளிலிருந்து எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை, அப்போதைய முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று, ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக அதிகரித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தன்னுடைய உத்தரவில், “முதலீடுகளை பெற்று வட்டி வழங்கக்கூடிய மனுதாரர் சங்கங்கள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கி நடவடிக்கைதான் என்பதால் வரி பிடித்தம் செய்யலாம். தற்போதைய நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதில் அதிகமாக பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்க கோரலாம். அரசின் கடன் தள்ளுபடி அல்லது வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் போலி நபர்களுக்கு சென்றடைகின்றன. வருமான வரி சட்டத்தின் பிரிவு 194N என்பது பண விநியோகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கும், பணமில்லாத பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குமான வழிகளில் ஒன்றாகவும் உள்ளது.

வங்கி கணக்கை தொடங்குது மிகவும் எளிதான செயலாக உள்ளதால் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற நிவாரணங்களை வங்கி கணக்கிலேயே செலுத்தலாம். இதனால், பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியமில்லை. நேரமும் மிச்சமாகும். எத்தனையோ விதமான மோசடிகள் நடக்கின்றன. இவைகளை தடுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுபவர்கள் புது புது வழிகளை கண்டுபிடித்தபடியே இருக்கிறார்கள். அதனால்தான், அரசு வழங்கும் உதவி, நேரடியாக பயனாளருக்கு சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால், ஏழை விவசாயிகள், நெசவாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுவிடும்.

எனவே, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டால், முறைகேடுகள் வெகுவாக தடுக்கப்படும்” என்று கூறிய நீதிபதி இந்த வழக்குகளை முடித்து வைத்தார்.

Chella

Next Post

தொடர்ந்து உயரும் தங்கம் விலை..!! கவலையில் நகைப்பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் இதுதான்..!!

Wed Dec 20 , 2023
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,795 ரூபாயாகவும், சவரனுக்கு 46,360 ரூபாயாகவும் விற்பனையானது. […]

You May Like