வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
அதன் அடிப்படையில், வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்தப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை சென்ற ஜூன் மாதம் ஆரம்பம் ஆனது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மாநில முழுவதும் 3️ தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பொருத்தப்படுவதற்கான டெண்டர் கோரப்பட்டதாக தெரிகிறது.
அதில் பங்கேற்பதற்காக சென்ற 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு டெண்டர் கடைசி தேதி 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை மின்வாரியம் ரத்து செய்திருக்கிறது.
ஸ்மார்ட் மின்மேட்டர் டென்டருக்கான விளக்க கூட்டத்தில், பங்கேற்ற 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 265 சந்தேகங்களை எழுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே நிறுவனங்கள் எழுப்பிய சந்தேகத்திற்கு ஏற்றவாறு டெண்டர் விதிகளில் திருத்தங்கள் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதேபோல மூன்று தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான புதிய டெண்டர் மிக விரைவில் கோர முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.