கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அயிரூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான வாலிபர் ஒருவர் கடந்த ஆண்டு சமூக வலைதளம் மூலம் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நைசாக பேசி நேரில் வரவழைத்த வாலிபர், மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் கைதான வாலிபரிடம் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் ஜெயசனிலுக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயசனில் அந்த வாலிபரை தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும், போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறி வாலிபரை மிரட்டி அவரிடமிருந்து பணத்தையும் பறித்துள்ளார்.
ஆனால், பணத்தை வாங்கிய பிறகு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார். இந்நிலையில், போக்சோ வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன்னை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஜெயசனில் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயசனில் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெயசனில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, வர்க்கலா பகுதியைச் சேர்ந்த சில ரிசார்ட் உரிமையாளர்கள் மீதும் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவ்வாறாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கிய இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் உத்தரவிட்டுள்ளார்.