பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், பட்டாசு தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு, பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகள் விற்பனைக்கு இந்த ஆண்டாவது அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சரவெடி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி என உத்தரவிட்டதுடன், பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது.
அந்தவகையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், சரவெடிக்கான தடை தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.