சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து, தேர்வுத்தாள் திருத்தும் பணியை நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரும், வேதியியல் துறைத் தலைவருமான கோபி மீது, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு இணைந்து பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர், அனுமதியின் பேரில் பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து மனு அளிக்கச் சென்ற நிலையில், அவர் அவர்களை சந்திக்காமல் வெளியே சென்றுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் ஆகியோர் துணை வேந்தர் ஜெகநாதனை சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே, நேற்று முதல் ஆசிரியர்கள் பல்கலைக்கழக தேர்வுத்தாள்களை திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களை மதிக்காத துணை வேந்தரின் செயலை கண்டித்தும், ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், இரண்டாம் பருவத்தேர்வு தாள்களை திருத்தும் பணிகளை நிறுத்தியுள்ளனர். இதனால் உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.