சண்டிகரில் நடைபெற்ற மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, இன்று திட்டமிட்டப்படி டெல்லியில் போராட்டம் நடைபெறும் என விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உ.பி., பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில் டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள், விவசாயிகளுடன்நடத்திய பேச்சுவார்த்தை நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்து தோல்வி அடைந்தது.
அந்தவகையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (பிப்.13) டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தது. எங்களது ஒவ்வொரு கோரிக்கை மீதும் விவாதம் நடந்தது. ஆனால், அவை வெறும் கோரிக்கைகள் அல்ல, அவை அனைத்தும் அரசின் வாக்குறுதிகள். அதனால் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டெல்லி நோக்கி செல்ல வேண்டும் என்பது என் கருத்து” என விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்தார்.
அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அதில் கலந்து கொள்ள நாங்கள் தயார். அதே நேரத்தில் நாங்கள் இன்று டெல்லி நோக்கி செல்வோம் என விவசாய சங்க பிரதிநிதி சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார். விவசாயிகளைத் தடுக்க, பஞ்சாப், சண்டிகர், ஹிமாச்சல் பிரதேச எல்லையான பஞ்ச்குடாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில், டெல்லி முழுவதும் வரும் மார்ச் 12ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி போராடுவோரை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய அளவில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.