நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவரின் ஆபாச செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தமிழ் மற்றும் கேரளா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆவார். தற்போது, கேரள திரைப்படமான தங்கம் திரைப்படத்தில் வினித் சீனிவாசன் உடன், அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்காக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற இடங்களில் படத்தை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடந்துள்ளது. அந்த வகையில், எர்ணாகுளத்தில் இயங்கிவரும் சட்டக்கல்லூரி ஒன்றில் இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்த விழாவில் படத்தின் கதாநாயகன் வினித் சீனிவாசன், கதாநாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, சட்டக் கல்லூரியில் அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அவர், பின்னர் அபர்ணாவை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார். மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார். அந்த மாணவர் பின்னர் மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டதோடு, தான் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டேன் என்பதற்கான விளக்கத்தை தெரிவித்த நிலையில், மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் மாணவரின் நடத்தையை கண்டிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபர்ணாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் ரசிகர்கள், கல்லூரியை கண்டித்தும் வருகிறார்கள்.