ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு, பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்தது இஸ்ரேல். தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை பாலஸ்தீன் பூர்வ குடிகள் விரும்பவில்லை. இதனால், பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் படைபலத்தை அதிகரித்த இஸ்ரேல், பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றிக்கொண்டே வந்தது.
இஸ்ரேல் தனது நிலப்பரப்பை பெரிதாக்கி, பாலஸ்தீன நிலப்பரப்பு வரைபடத்திலேயே காணாமல்போகும் அளவுக்கு செய்தது. காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமே தற்போது பாலஸ்தீன் வசம் உள்ளன. ஆனால், அதையும் கைப்பற்ற இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றுவதற்காக லட்சக்கணக்கான மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்கு தொழுகைக்கு செல்ல விடாமல் தடுப்பது, தொழுக செல்பவர்களை மசூதிக்கு உள்ளே சென்று அவர்களை தாக்குவது, சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது என இஸ்ரேல் பல்வேறு மனித உரிமை மீறல்களை செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அல் அக்சா மசூதிக்கு ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சர் சென்றபோது இஸ்ரேலிய படைகள் காலணிகளுடன் நுழைந்ததாகவும், அங்குள்ள இஸ்லாமிய தலைவர்களின் கல்லறைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இதனை காரணம் காட்டி காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிலிருந்து இஸ்ரேலை நோக்கி திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய தொலைக்காட்சி நடிகை மதுரா நாயக் வெளியிட்ட செய்தியில், அவருடைய சகோதரி மற்றும் அவரது கணவர் இருவரும் அவர்களின் குழந்தைகள் கண் முன்னே படுகொலை செய்யப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியான யூத பெண்ணான மதுரா, நாகின் தொடரில் நடித்து வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில், என்னுடைய குடும்பத்தினர் எதிர்கொண்ட வருத்தமும் மற்றும் உணர்ச்சிகளையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இஸ்ரேல் இன்று வேதனையில் உள்ளது. ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் தெருக்களில் தீப்பற்றி எரிகின்றன என தெரிவித்துள்ளார்.