விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசாங்கத்தால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் அருகே ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட பயனாளிகளிடையே காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குஜராத்தைச் சேர்ந்த 60 லட்சம் விவசாயிகளும், சூரத்தில் இருந்து கிட்டத்தட்ட 1.25 லட்சம் விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் பலனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் முந்தைய அரசுகள் பல வாக்குறுதிகளை அளித்தாலும் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், எங்கள் அரசாங்கத்திற்கு விவசாயிகளின் நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அதனால் தான் விவசாயிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். இதனால், குறைந்த செலவில் சிறந்த மகசூல் கிடைக்கும். கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்காக நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் அரசால் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில் குஜராத்தில், மட்டும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குஜராத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளில் 97 சதவீத வீடுகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும், உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இது சாதாரண சாதனையல்ல. ஒவ்வொரு இந்தியனும் அதை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உற்சாகத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.