நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான மருந்தின் தரத்தை உறுதி செய்வதற்காகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மருந்து நிறுவனங்களும் மருந்து அட்டைகளில் க்யூ.ஆர் கோடை பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
அதாவது சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் க்யூ ஆர் அல்லது பார் கோடு அச்சிடப்பட வேண்டும். இதனை ஸ்கேன் செய்யும் போது மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய முடியும். இதன் மூலம் மருந்தின் உண்மைத் தன்மையை நுகர்வோர்கள் எளிதில் அறியலாம் எனவும் இந்த நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி மருந்து நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் மருந்துகளின் அட்டைகளில் க்யூ.ஆர் கோடை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்தக் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, மருந்து எங்கு தயாரிக்கப்பட்டது என்ற முகவரி, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பெயர், மருந்தின் பெயர், மருந்தின் பொதுப்பெயர், மருந்து சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள், அதன் அளவுகள் ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்து அட்டைகளில் க்யூ.ஆர் கோட் பதிவு செய்வதற்கு 5 சதவீதம் கூடுதலான தொகை செலவு ஆகும் என்று கூறப்படுவதால் மருந்துகளின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.