ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ததை திரும்பப் பெறுமாறு மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்திருந்தது.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எம்பி பதவி திரும்ப ஒப்படைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இதேபோன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தியை பேச வைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.