நாடெங்கிலும் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து ஒருவர் மீது ஒருவர் பல வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். ஹோலி பண்டிகை என்பது ஒரு மதப் பண்டிகை என்பதையும் தாண்டி இந்தியாவின் கலாச்சார பண்டிகையாக இருந்து வருகிறது. இந்தப் பண்டிகை ஒரு மதத்திற்கான பண்டிகையாக பார்க்கப்படாமல் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கே பறைசாற்றும் பண்டிகையாக இது பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவரும் வேற்றுமைகளை கலைந்து ஒருவரின் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் சந்தோசங்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலாச்சார திருவிழாவான ஹோலி பண்டிகை மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மேனார் கிராம மக்கள் தங்களது ஹோலி பண்டிகையை வித்தியாசமான வகையில் கொண்டாடியுள்ளனர்.
இந்தப் பகுதியை சார்ந்த மக்கள் தங்களது ஹோலி பண்டிகையை துப்பாக்கியால் சுட்டும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர். இந்த கிராமத்தில் ஹோலி பண்டிகை 450 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜா மகாராணா பிரதாபின் தந்தை ராஜா உதய சிங் எதிரிகளுக்கு எதிராக வீரமுடன் போராடியதை நினைவு கூறும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.