சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு சென்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது படங்களின் ரிலீசுக்கு முன்னர், இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதற்கிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அண்ணாத்த படத்தின் போது அவரால் இமயமலை செல்ல முடியவில்லை. இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இமயமலைக்கு சென்றிருக்கிறார் ரஜினி. அங்கு ஒரு வார காலம் தங்கி அங்குள்ள ஆன்மீக தலங்களில் தரிசனம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை இமயமலைக்கு புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை.. தற்போது தான் செல்கிறேன் என்றார். பின்னர், செய்தியாளர்கள் அவரிடம், ஜெயிலர் படம் எப்படி இருக்கு என கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினி, அதை நீங்க தான் சொல்லனும், படம் பார்த்துட்டு சொல்லுங்க என கூறினார்.
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியதும் அதற்கு பதிலளிக்காமலேயே காரில் கிளம்பிவிட்டார் ரஜினி. பின்னர், விமான நிலையம் வந்த ரஜினிகாந்தை போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர்.