திமுக இளைஞரணி மாநாட்டின் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில அரசுக்கான நிதி பங்கீடு, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், மாநிலத்தின் பண்பாட்டு உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய இந்த சுடர் தொடர் ஓட்டம் அண்ணாசாலை, பிலால் ஓட்டல், ஸ்பென்சர் சிக்னல், ஆயிரம் விளக்கு மெட்ரோ, ஆயிரம் விளக்கு மசூதி, அண்ணா அறிவாலயம், அன்பகம் சைதாப்பேட்டை, நந்தனம் கலைக் கல்லூரி, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர் மெட்ரோ, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல் மருவத்தூர், அச்சரப்பாக்கம், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், தலைவாசல், ஆத்தூர் வழியாக பெத்த நாயக்கன் பாளையத்துக்கு வரும் 20ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது.
மாநாட்டு சுடருக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக சுடர் 316 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. இந்த சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, “ராமர் கோயில் திறப்பிற்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்துள்ளார்.