வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது..
எனவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. எனினும் இன்று நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடையை மீறி அதிபர் மாளிகைக்குள் முற்றுகையிட முயன்றனர்.. இதையடுத்து நிலையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.. மேலும் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.. இதில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இதனிடையே இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி விட்டார்.. கொழும்புவில் உள்ள மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கோட்டபய ராஜபக்ச தப்பியோடியதாக கூறப்படுகிறது.. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.. இதனிடையே தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது..
இந்நிலையில் இலங்கை சபாநாயகர் இல்லத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரம் சிங்கவும் பதவி விலக வேண்டும் என்று பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.. மேலும் அனைத்துக்கட்சி அரசை அமைக்கவும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது..
அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாகவும், இதுகுறித்து சபாநாயகர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.. ஒரே நேரத்தில் பிரதமரும், அதிபரும் பதவி விலகும் பட்சத்தில், இலங்கை அரசியலமைப்பு விதிகளின் படி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்புள்ளது.. எனவே இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.. இதற்கான தீர்மானமும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. அனைத்துக்கட்சி ஆட்சி அமைக்கப்பட்டால் பதவி விலக தயார் என்று ரணில் விக்ரம்சிங்க ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது..