DoT: சைபர் மோசடியைத் தடுக்கும் முயற்சியாக, பயனர்கள் தங்கள் caller ID-களைக் கையாள உதவும் பயன்பாடுகளை அகற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் தற்போது ஆன்லைன் வழியாக மக்களை எளிதாக தொடர்பு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் நேரடி தொலைபேசி அழைப்புகள் முதல் மெசேஜிங் செயலிகளான வாட்ஸ்-அப் ஆகிய தளங்கள் வரை பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில், காலர் ஐடிகள் மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்கும் வகையில், பயனர்கள் தங்கள் காலர் ஐடிகளை கையாள அனுமதிக்கும் பயன்பாடுகளை அகற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் மோசடியைத் தடுக்கும் முயற்சியில், காலிங் லைன் ஐடென்டிட்டி (CLI)க்கு எதிராக தொலைத் தொடர்பு துறையின் அதிரடி நடவடிக்கையாகும். ஒரு நபர் சிம் அல்லது பிற தொலைத்தொடர்பு அடையாளத்தை பயன்படுத்தி செய்யும் குற்றங்கள், தொலைத்தொடர்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றம் சட்டப்படி தண்டனைக்குரியது. குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளது.
காலிங் லைன் ஐடென்டிட்டி (CLI) என்பது, அழைப்பாளர் ஐடி ஸ்பூஃபிங் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு மோசடி நுட்பமாகும், இதில் ஒரு அழைப்பாளர் தனது தொலைபேசி எண்ணை வேறொருவர் போல் தோன்றும் வகையில் மாற்றுகிறார். இந்த மோசடியைச் செய்ய மோசடி செய்பவர்களால் பல செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன, இதன் மூலம் மக்களை ஏமாற்றி, பெரும்பாலும் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இதுகுறித்து, நபர் ஒருவர், அழைப்புகள் வேறு எண்ணிலிருந்து வருவது போல் தோன்றும் வகையில் CLI-ஐ எவ்வாறு மாற்றியமைப்பது என்பதை கூறியதையடுத்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு இந்த ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. “தொலைத்தொடர்பு அடையாளங்காட்டியை (CLI, IP முகவரி, IMEI போன்றவை) சேதப்படுத்த அனுமதிக்கும் எந்தவொரு செயலியும், தொலைத்தொடர்பு சட்டம், 2023 இன் விதிகளை மீறுவதன் மூலம் பயனர்கள் குற்றம் செய்யத் தூண்டுவதாகும்.
எனவே, தொலைத்தொடர்பு சட்டம், 2023 இன் விதிகளுக்கு முரணாக, தொலைத்தொடர்பு அடையாளங்காட்டியை சேதப்படுத்த அனுமதிக்கும் அல்லது ஊக்குவிக்கும் உள்ளடக்கம்/பயன்பாடுகளை சமூக ஊடக தளங்கள் மற்றும் செயலி ஹோஸ்டிங் தளங்கள் அகற்ற வேண்டும்” என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளை வழங்கும் தளங்களும் இந்த ஆலோசனையைப் பின்பற்றி, பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்புத் துறையிடம் இணக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
Readmore: இந்த ஒரு பானம் போதும், உடலில் எந்த நோயும் வராது.. முதல்வரே தினமும் இதை தான் குடிப்பாராம்..