ஆசிய பணக்காரர் பட்டியலில் இருந்து முதலிடத்தை கெளதம் அதானி இழந்துள்ள நிலையில், அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கெளதம் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம், அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் கடும் சரிவைக் கண்ட நிலையில் ரூ. 19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது, ரூ. 11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
இந்நிலையில் 20,000 கோடி மதிப்புடைய பங்கு விற்பனை ரத்து (FPO) செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, அதானியை பின்னுக்குத் தள்ளி 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதோடு, மேலும் ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.