குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் ஜனநாயகம் வாழும். உங்களுக்கெல்லாம் வாக்களிக்கும் வயது வந்துவிட்டது. கையில் மை வைக்கப்படுவதற்கு முன் யாரைத் தேர்தெடுக்கிறோம் என்ற விழிப்புணர்வு வேண்டும்.இந்தி ஒழிக அல்ல… தமிழ் வாழவேண்டும் என்றே கூறுகிறேன். நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் வந்து விடும். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் பாராட்டுகிறேன்.

தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன். தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்படக் கூடாது. வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம். அது வரும்போது வரட்டும், நீங்களாக தேடாதீர்கள். 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதில் எத்தனை சதவீதம் நிஜம்? ஏனென்றால் பெண்கள் பதவி பெற்றாலும் ஆண்கள் தான் ஆதிக்கம், அதிகாரம் செலுத்துகிறார்கள் அது பெண் சுதந்திரம் ஆகாது,முழுமையானது ஆகாது. முழுமையாக கொடுத்து விட்டால் 50 சதவீதம் 5 வருடத்தில் வரும்” என்றார்.