மகளிர் உரிமைத்தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தவித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு கடந்த 15ஆம் தேதியன்று அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.
இதனை சரி செய்து அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், அஞ்சலக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மனியார்டர் மூலமாக தொகை அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மகளிர் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்கள் பலரும் இ-சேவை மையத்தில் குவிந்து வருகின்றனர்.
மேலும் விண்ணப்பம் அளித்தும் தொகை வரவு வைக்கப்படாதவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய அரசால் https://kmut.tn.gov.in என்ற இணையதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
தங்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் 1100 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். இந்நிலையில், மேற்கண்ட இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியுள்ளதால் பலரும் சிரமமடைந்து வருகின்றனர். இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.