கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் தி.மு.கவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்றும் தகவல் பரவியுள்ளது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் தவறானது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை களங்கப்படுத்தும் எண்ணத்தில், எந்த விதமான அடிப்படை முகாந்திரம் இல்லாமலும் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
இதனால் தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு மன உளைச்சலும், மன வேதனையும் உண்டாகி உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது . இந்த விவகாரம் கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.