சேலம் மாமாங்கத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் வசித்து வருபவர் இருசன் என்பவர். இவரது மனைவி நிலா. இவர்களுக்கு ரேஷ்மா, கஸ்தூரி, லோகேஸ்வரி என்ற 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் , மற்ற 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நிலா இயற்கை உபாதை கழிக்க இரவு நேரத்தில் சென்றிருந்த நிலையில், அவரை விஷப்பாம்பு ஒன்று தீண்டியுள்ளது.
அதனை தொடர்ந்து , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் கழிவறை இல்லாததால் தன் மனைவி இறந்ததற்கு தன்னை காரணமாக எண்ணி பெரும் மனவேதனை அடைந்த இருசன், மேலும் தன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என தீர்மானித்துள்ளார். அதனால் கடும் முயற்சி செய்து எல்லா வசதிகளுடன் கூடிய புதிய வீட்டை கட்டினார்.
அச்சமயத்தில் இறந்தவர்களின் சிலை அமைத்து விழாக்கள் நடத்துவதை பார்த்த இருசன், இதுபோல் தனது மனைவிக்கும் சிலை வைக்க வேண்டும் என முடிவு செய்தார். சென்னையில் சிலை தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலவு செய்து சிலிக்கான் மற்றும் பைபரால் மனைவி நிலாவின் சிலையை உருவாக்கி அதனை, தான் புதிதாக கட்டிய வீட்டின் வரவேற்பறையில் வைத்து உறவினர்கள் மற்றும் இருசன் வழிபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து நிலா உயிருடன் இருக்கும் போது அணிந்திருந்த நகைகள், சேலைகள் மற்றும் தாலி என அனைத்தையும் அவரது சிலைக்கு அணிவித்து அழகு பார்த்து வருகிறனர். இந்நிகழ்ச்சி அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.