அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்றும் பணிக்கு வராத ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. மேலும் வரும் 15ஆம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.