தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மலிவான விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் பல உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணமாக செலுத்த தேவையில்லை. யுபிஐ மூலம் எளிதாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் சிறுதானியங்கள் விற்பனை செய்யும் வகையில் ராகி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியங்கள் தரம் குறைந்தவையாக இருப்பின் உடனே தகவல் அளிக்கவும், புகார் பெட்டியில் தெரிவிக்கவும், உடனுக்குடன் தொடர்பு கொள்ள எண்களும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதன்படி, ஆலம்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் நீளமான அரிசி கலக்கப்பட்டுள்ளதாகவும், அரிசியை ஊற வைக்கும் போது அவை தனியாக மிதப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை சோதனை செய்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.