தமிழ்நாடு முழுவதும் 300 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கூட்டுறவு துறை சார்பாக தக்காளி விலையினை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, தக்காளி விலை உயர்வையடுத்து, 60 ரேஷன் கடைகளில் தக்காளியின் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். உழவர் சந்தைகளில் சிறிய வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிகளவில் விற்பனை செய்ய அறிவுறுத்திய முதலமைச்சர், 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும்.நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பருப்பு இருப்பு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு பதுக்கல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மளிகை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை அனைத்து கூட்டுறவு சங்க அங்காடி மற்றும் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.