தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில், அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் புஸ்ஸி ஆனந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மற்றும் நடிகர் விஜய் அடிக்கடி மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் கண்டிப்பாக விரைவில் அரசியலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த 10,000 மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவித்தொகை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் சென்னை அல்லது திருச்சியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இதனால் நடிகர் விஜய் கிட்டத்தட்ட அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.