ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ரெட்டி. இவருக்கு ஸ்வப்னா ரெட்டி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களின் 14 வயதான மூத்த மகன் ராயந்த் ரெட்டி, ஐதராபாத், காஜாகுடா பகுதியில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் இளைய மகனும் ஐதராபாத்தில் படித்து வருகிறார். 2 மகன்களும் ஐதராபாத்தில் படித்து வருவதால், ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் ரெட்டி தனது குடும்பத்தினருடன் குடி பெயர்ந்தார்.
ராயந்த் ரெட்டிக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல், சரியாக படிக்காமல் இருந்துள்ளான். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராயந்த் ரெட்டி தனது தாய்க்கு செல்போனில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளான். அதில், படிப்பில் இஷ்டம் இல்லாமல், சரியாக படிக்காததால் எனக்கு அவமானமாக உள்ளது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என மெசேஜ் செய்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த தாய், குடியிருப்பு காவலாளிகளுடன் சேர்ந்து இரவு முழுவதும் தனது மகனை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை.
இதையடுத்து சம்பவம் குறித்து ராயதுர்கம் போலீசில் மாணவனின் தாய் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அடுக்கு மாடி குடியிருப்பின் எச்.பிளாக் படிக்கட்டில் மாணவன் ராயந்த் ரெட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராயந்த் ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பின் 35-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.