சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர், வேலாயுதம். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது இளைய மகன் செல்வா, 7ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று, வேலாயுதம் கண்ணில் மருந்து ஊற்றி விட்டு படுத்துள்ளார். அப்போது சிறுவனின் தாய், தனது மூத்த மகனை வெளியில் அனுப்ப வீட்டின் வாசலுக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவன் செல்வா, வீட்டில் புடவையால் கட்டிவைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுற்றி, சுற்றி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக, புடவை கழுத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில், உறவினர் ஒருவர் எதர்ச்சியாக இவர்களின் வீட்டிற்க்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் செல்வா சுயநினைவின்றி இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சிறுவனின் பெற்றோர் கதறி துடித்துள்ளனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகி நகர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.