திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் நிர்வாகியாக அன்பரசு என்பவரும், தலைமை ஆசிரியராக அந்தோணி என்பவரும் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் நீர்நிலைகளை ஆக்கிரமித்து பள்ளியை கட்டி இருப்பதாக தெரிவித்து கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீர்நிலைகளில் இருக்கின்ற கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால் நேற்று மாவட்டங்கள் சார்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரைவிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஏமாற்றத்துடன் பள்ளி வாசல் முன்பு காத்திருந்தனர் அதன் பிறகு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தை சுத்தம் செய்து மாணவ, மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால் முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்து கட்டிடம் உறுதி தன்மையில்லாமல் உள்ளது. கழிப்பிட வசதி குடிநீர் வசதி போன்றவை இல்லை என்று தெரிவித்து இங்கு பள்ளி செயல்பட அனுமதி இல்லை என கூறினர்.
ஆனால் இதையும் மீறி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு இங்கே பாடம் கற்பிக்கப்பட்டால் இந்த கட்டிடத்திற்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.