கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பீகார், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடும் வெயிலால் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், நடை வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் இருக்கும் நிலையில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ”வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பணிநேரத்தை மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும். பணியிடங்களில் குடிநீர் வசதியை உறுதி செய்ய மாநில அரசு கண்காணிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் அவசர கால ஐஸ் பெட்டிகள், வெப்ப நோய் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுரங்க தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வு எடுக்க இடம் அமைத்து கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.