கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் குறுவை பயிரைக் காப்பாற்ற விநாடிக்கு 5,000 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டு, உடனடியாக தண்ணீரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான வகையிலும், அதை அவமதிக்கும் நோக்குடனும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக எண் கொண்ட வாகனங்கள் அனைத்திற்கும் கர்நாடகா எல்லையில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.