உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் OYO ஹோட்டல்களின் அறைகளில் தம்பதிகள் தனியாக இருக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் நோக்கில் யாரும் கண்டறிய முடியாத கேமராக்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
OYO ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்த ஒரு கும்பல் யாரும் கண்டறிய முடியாத கேமராக்களை வைத்திருந்து விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், OYO ஹோட்டல்களில் மர்ம கும்பல் அறைகளை முன்பதிவு செய்து, யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் கேமராக்களை பொருத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர். பின்னர், அங்கு வாடகைக்கு அறை எடுத்துத்தங்கும் தம்பதிகள் ஒன்றாக இருப்பதை அந்தக் கேமராக்கள் பதிவு செய்கிறது. பின்னர் மீண்டும் அதே அறைக்கு வந்து தங்கும் மர்ம கும்பல் அந்த வீடியோக்களை எடுத்து, அங்கு தங்கியிருந்த தம்பதிகளின் செல்போன் எண்ணை எடுத்து, அவர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி மிரட்டி வந்தனர்.

அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கத் தவறும் பட்சத்தில் அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று அந்த மர்ம கும்பல் மிரட்டியிருக்கிறது. இதுதொடர்பாக விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார், அனுராக் குமார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று வெவ்வேறு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கும்பல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.