அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி-யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.
அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம், பொதுக்குழு கூடுவதற்கு அறிவிப்பு கொடுத்துள்ளது செல்லாது என்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இருந்தால்தான் அந்த கூட்டத்தை நடத்த முடியும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், வரும் 11ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனி நீதிபதி முன் முறையிட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை விசாரிப்பதற்காக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
![அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு..! டிஜிபியிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/02/Jayakumar_AIADMK_Facebook_21022022_1200.jpg)
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபி-யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், “சில சமூக விரோதிகள் பொதுக்குழுவை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. எனவே அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்குவதாக டிஜிபி உறுதியளித்துள்ளார். ஜூன் 23இல் நடந்த பொதுக்குழுவில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அரசு அறிவிக்கும் கொரோனா விதிமுறைகள் பொதுக்குழுவில் பின்பற்றப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுகிறது. முறைப்படி கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பும் வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.