சுய உதவிக்குழு பெண்களுக்கு, டிரோன் குறித்த பயிற்சி தந்து, டிரோன் இயக்குவதற்கான உரிமத்துடன், டிரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பல்வேறு பண்ணை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால் டிரோன் மூலம் மருந்தினை தெளிக்கும் போது. மருந்தின் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கிறது. மேலும், தற்போது கிராமப் புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், டிரோன் மூலம், குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும். வழக்கமாக மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு டிரோன் பயன்பாட்டில் குறைத்துக் கொள்ளலாம். மேலும், வேலையாட்களின் பணிச்சுமை குறைவதோடு, சாகுபடி செலவும் கணிசமாக குறைகிறது.
எனவே, இத்தகைய டிரோன் தொழில் நுட்பத்தினை சுய உதவிக்குழு மகளிர்களுக்கு கற்றுத்தந்து. அதன் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக ஒன்றிய அரசு சென்ற ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு டிரோன் வழங்கும் திட்டத்தினை அறிவித்தது. இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் 44 சுய உதவிக்குழு பெண்களுக்கு, டிரோன் குறித்த பயிற்சி தந்து, டிரோன் இயக்குவதற்கான உரிமத்துடன், டிரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டிரோன் மகளிர் தொடர்பான விபரங்கள் உழவர் கைபேசி செயலியில் தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டிரோன் மகளிர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். எனவே. விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவர் கைபேசி செயலி மூலமாக டிரோன் மகளிரை நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.