தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமிகளும் ஒருவர். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கும் பக்தர்கள் வணங்குகின்றனர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் என்ற புகழுக்குரியவர். அத்துடன் வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
அந்த வகையில், இந்த தினத்தை முன்னிட்டு அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.