நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் தலைவர்களை குறிவைத்து காய் நகர்த்திய நிலையில், திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இந்த வலையில் சிக்கினார். நீதிமன்ற உத்தரவுப்படி, பல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதையடுத்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த ஒரு வருடமாக ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் செந்தில் பாலாஜி.
இந்த மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வேறோரு வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளது.
இல்லையென்றால் சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், சட்டவிரோத பண வழக்கில் பிரிவு 45 பிணை வழங்க 2 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென கூறினாலும், ஜாமீன் தொடர்பான உரிமைகளை அது பாதிக்காது என நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய அறிவுறுத்தலால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, விரைவில் செந்தில் பாலாஜி ஜாமீன் வெளியே வருவார் என அவரது ஆதரவாளர்களும், திமுக நிர்வாகிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Read More : பிளஸ் 2 முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!