மத்திய பிரதேசத்தில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியின் சீனியர் எம்பிபிஎஸ் மாணவர்கள், கடுமையான மற்றும் இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபடும்படி ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்து ராகிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகள், மற்ற மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தலையணையை வைத்து பாலியல் செயல்களில் ஈடுபட வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசியின் ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு ஜூனியர் மாணவர்கள் இந்த கொடூரமான சம்பவத்தை தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட யுஜிசி குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. சம்பந்தப்பட்ட மூத்த மாணவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜூனியர் மாணவர்கள் அளித்த புகாரில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை பெண் பேட்ச்மேட் பெயரைத் தேர்வு செய்ய வற்புறுத்துவது மற்றும் தவறான மற்றும் ஆபாசமான நடத்தைகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த புகாரில் “ எங்களை ஒருவரையொருவர் அறைந்து கொள்ள கட்டாயப்படுத்தினர்.. அதைச் செய்யத் தவறியபோது சீனியர் மாணவர்கள் எங்களை தாக்கினர்.. மொபைல் போன்களை எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டதால், அவர்களின் செயல்களை பதிவு செய்ய முடியவில்லை..
ஜூனியர் மாணவிகளின் உடல், உருவம் மற்றும் தோலின் நிறம் குறித்தும் சீனியர் மாணவர்கள் ஆபாசமான கருத்து தெரிவித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன, இதனால் எங்களுக்கு தற்கொலை எண்ணங்களும் வருகின்றன” என்று புகார் கூறுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்களை காவல்துறையினர் பதிவு செய்து வருவதாக உள்ளூர் காவல் நிலையப் பொறுப்பாளர் தெஹ்சீப் காசி தெரிவித்தார்.