அசாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 9 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியே பரவி பலரது உயிரை பறிக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல், மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரை நீடிக்கிறது. ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில், கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ஆம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.