திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஜி கண்டிகை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.