கல்லூரி மாணவி ஒருவரை மாணவர்கள் ராக்கிங் செய்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த ராக்கிங் வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ என கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் போது, பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.

இதை சுற்றிலும் நின்று மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ராக்கிங் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராக்கிங் செய்த அந்த மாணவன், ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த மாணவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த மாணவருக்கு உடந்தையாக இருந்த மற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அவர்களையும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கல்லூரிக்கு சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.