பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குவதற்கு உதவியாக விளங்கி வருவது விடுதிகள். ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது அதிகரித்துவிட்ட நிலையில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளும் தற்போது விடுதிகளாக மாறியுள்ளன. இந்த நிலையில் 2023 புத்தாண்டு தினத்தன்று OYO-வில் புக்கிங் செய்யப்பட்ட ரூம்கள் எத்தனை என்பது குறித்து அதன் நிறுவனர் மற்றும் அந்த குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கடந்த ஐந்து ஆண்டுகளை கணக்கிட்டு பார்க்கையில் இந்த வருடம் புக்கிங் ஆனது அதிக எண்ணிக்கையில் உள்ளதாக OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எந்த ஊரில் அதிக புக்கிங்? : கொரோனாவிற்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு குறிப்பாக பயணம் மற்றும் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் கண்டது. அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் கோவாவை காட்டிலும் வாரணாசியில் அதிகமானோர் புக் செய்துள்ளனர். இந்தப் புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 4.5 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
OYO-ன் முந்தைய டேட்டாக்களை பார்க்கும்போது, 2022ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் தான் மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட மாநிலமாக இருக்கிறது. 2021ம் ஆண்டை காட்டிலும் 2022ம் ஆண்டில் ஹத்ராஸ், உத்தரகாண்டில் உள்ள ஸ்ரீநகர், சசரம், காரைக்குடி மற்றும் தெனாலி போன்ற சிறிய நகரங்களில் அதிக முன்பதிவுகள் நடைபெற்றது.