நாட்டில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகி கட்டணமாக ரூ.50 செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம். ‘மை ஆதார்’ என்ற இணையதளத்திலும் புதுப்பித்து கொள்ளலாம்.
ஆதார் புதுப்பிக்கும் பணிகளுக்காக தமிழகத்தில் பகுதி வாரியாக கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக ஆதார் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்டத்தில் கடகத்துர், கரகத அள்ளி, கூத்தப்பாடி, சின்னாங்குப்பம் ஆகிய 4 கிராமங்களில் டிசம்பர் 7ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். அத்துடன் இதற்கான ஆவணங்களை தவறாது எடுத்துக் கொண்டு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.