சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணமாக சென்றுள்ளனர். அவர்கள், கிரிவலப்பாதையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து வந்த கதவை திறந்து பார்த்தபோது, 4 பேரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த டைரியில், நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த யாசர் (45), அவரது மனைவி பிரியா (40), இவர்களது மகள் ஜலந்தரி மற்றும் மகன் ஆகாஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு அருகே சயனைடு இருந்ததால், அதை குடித்து 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.